திருச்சி: காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டத்தில் காவல்வாய் தூர்வாரும் பணிகளை 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

2நாள் பயணமாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் நேற்று   திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு  அம்மாபேட்டை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில், பீமனோடை வடிகால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.  14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த நிலையில்,  தொடர்ந்து அரசு அலுவலகங்களில் தனது ஆய்வுகள் தொடரும் என்றும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று  நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடை மற்றும் கல்லார் கிராமம், கல்லார் வடிகாலில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

மயிலாடுதுறை: தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் நடைபெற்று வரும் விவசாயப் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விதை நெல்லை தூவி விவசாயப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் அரசு அதிகாரிகள், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.