தற்போது சமூகவலைதளங்களில் “திராவிட நாடு” என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன.

திராவிட நாடு குறித்து மறைந்த அண்ணா அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை பிரசுரித்திருந்தோம்.

இந்த நிலையில் “தமிழ் தேசிய பேரியக்கத்தின்” தலைவர் பெ.மணியரசன்  அவர்களின், “திராவிட நாடு” குறித்த கருத்துக்கள்…

“திராவிட என்ற வார்த்தையே ஆரியர்களால் உருவாக்கப்பட்டதுதான். ஆரிய இலக்கியங்களான மனுதர்ம சாஸ்திரம் மற்றும் சில புராணங்களில்தான்  திராவிட என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிராமணர்களையும் சேர்த்துத்தான் அவர்கள் திராவிட என்று குறிப்பிட்டார்கள். இமய மலைக்கு தெற்கே – விந்திய மலைக்கு வடக்கே  இருந்த பகுதியை அவர்கள் ஆரியவர்த்தம் என்று அழைத்தனர். அந்தப் பகுதியை விட்டு வெளியே சென்றவர்களை –  குறிப்பாக பிராமணர்களை – திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்தனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பெயர் ராகுல் திராவிட். இவரிடம் திராவிட் என்ற பெயரைப் பற்றிக் கேட்ட போது, தனது பூர்வீகம் கும்பகோணத்தைச் சேர்ந்த பிராமண குடும்பம் என்றும் தனது குடும்பப் பெயர் திராவிடம் என்றும் கூறினார்.

அதே போல, தற்போது மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் உள்ள பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட்.  அவரது முன்னோர்கள் மும்பையில் இருந்தவர்கள். அவர் தனது குடும்பப் பெயர் திராவிட் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே நேரம், தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதே கிடையாது.

சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலோ, தேவாரம் திருவாசகம் போன்ற ஆன்மீக இலக்கியங்களிலோ திராவிடம் என்ற சொல்லே கிடையாது. அதைத் தமிழர்கள் விரும்பவுமில்லை.

ஆரியர் வருகையின் போது புழக்கத்தில் வந்தது திராவிடம் என்ற சொல். பிறகு  மறைந்து போனது. மீண்டும்  ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தச் சொல்லுக்கு மறு உருவம் கொடுக்கப்பட்டது.

மொழியியல் அறிஞர் கால்டுவெல் தமிழும் சமஸ்கிருதமும்  கற்றவர்.  அவர் மொழியியல் குறித்து ஆய்வு செய்த போது தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடியது என்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழில் இருந்து பிரிந்தவை என்றும் பதிவு செய்தார். இந்த மொழிக் குடும்பத்திற்கு அவர் திராவிட மொழிக் குடும்பம் என்று பெயர் வைத்தார்.

வடக்கே  மராத்தி, வங்காளி, குஜராத்தி ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று மாக்ஸ் முல்லர் போன்ற மொழி அறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.  அதே போல கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிட மொழிக்குடும்பம் என்று பெயர் வைத்தார்.

அதன்பிறகு தமிழக அரசியலில் வலுவாக திராவிடத்தை நிறுவ விரும்பியவர்கள் பெரியாரும் அண்ணாவும்  ஆவார்கள். தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என்று அனைவருக்குமான பொதுச் சொல் திராவிடம் என்று பெரியார் சொன்னார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1939ம் வருடம், பெரியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, 1944ம் வருடம் நடந்த மாநாட்டில் அதற்கு திராவிடர் கழகம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெரியாரும் அண்ணாவும்தான் திராவிடம் என்ற சொல்லை வலிந்து திணித்தார்கள்.  உண்மையில் அவர்கள் சொன்னதைப் போல தெலுங்கர்களோ மலையாளிகளோ கன்னடர்களோ தங்களைத் திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளவில்லை.

தமிழகத்தைப் போல திராவிடர் கழகம் என்ற அமைப்பு அங்கெல்லாம் இல்லை.

திராவிடர் கழகம் என்பது உண்மையில் தமிழர்களைக் கொண்ட அமைப்பாகத்தான் இருந்ததே தவிர,  நடைமுறையில் தென்னிந்தியர்களை ஒன்று படுத்தும் அமைப்பாக இல்லை.

திராவிடம் என்ற பெயரில் ஒரு நாடோ, ஒரு இனமோ, மொழியோ  என்றுமே  இருந்ததில்லை.

திராவிடம் என்ற வார்த்தையையே மற்ற தென்னிந்தியர்கள் எவரும் ஏற்றதில்லை. தமிழிலில் இருந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகள் பிரிந்தன என்பதைக் கூட அவர்கள் ஏற்றபதில்லை.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது, தென்மாநில முதலமைச்சர்களை அழைத்திருந்தார்.  அந்த மாநாட்டில் லெமூரியா கண்டம் குறித்த கண்காட்சியை கேரள முதலமைச்சர் ஈகே நாயனார் திறந்து வைத்தார்.  அப்போது அவர்,  தமிழும் மலையாளமும் அக்காவும் தங்கையும் போல என்று பேசினார்.  அதே மேடையில் பேசிய எம்ஜிஆர்  தமிழும் மலையாளமும் அக்காளும் தங்கையும் அல்ல. தாயும் மகளும் போல என்று சொன்னார்.

இப்போது கேரளாவில் இருந்து திராவிட நாடு என்ற சொல்லை சிலர் சொல்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் ஆரிய சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற இயல்பான இயற்கையான தேசிய இனங்களை அழிப்பதற்கு இந்துத்துவா சக்திகள் இப்படி ஒரு மாயையான ஒரு கருத்தாக்கத்தைப் பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இதை அறியாமல், இந்துத்துவாவை எதிர்ப்பதற்குக் கிடைத்த ஒரு கருவியாக இளைஞர்கள் சிலர் திராவிட நாடு என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்களை அறியாமல் இந்துத்துவா சூழ்ச்சிக்குப் பலியாகிறார்கள் என்பதுதான் உண்மை.

இது ஆர்எஸ்எஸ்சின் கைவேலையாக இருக்கும் என்றே கருத வேண்டியுள்ளது.