“பெண்களை அவர்கள் விருப்பமின்றி தொடுபவன் கைகளை வெட்ட வேண்டும்!” என்று, தொடாதே பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடியாக பேசினார்.
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், அலெக்ஸ் இயக்கத்தில் காதல் சுகுமார் – ப்ரீத்தி ஜோடியாக நடிக்கும் படம், ‘தொடாதே’.
படத் தயாரிப்பாளர் ஜெயக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
ராஜேஷ், ஒளிப்பதிவு செய்ய, ராஜா, இசை அமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் அலெக்ஸ் :
“‘குடியைத் தொடாதே’, ‘பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடாதே’, ‘போதைப் பொருட்களை தொடாதே’ என்னும் சமூகக் கருத்துக்களை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது” என்றார்.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று சென்னையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:
“குடியை தொடாதே என்பதை வலியுறுத்துகிறது இந்த தொடாதே படம். மிகப் பாராட்டுக்குரியது.
ஏனென்றால் குடிப்பழக்கத்தால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துவிட்டன. எத்தனையோ பெண்கள் தாலி அறுக்கப்பட்டு உள்ளனர்.
தவிர விதியை மீறி, பள்ளி, மருத்துவமனைகளுக்கு அருகெல்லாம் மதுக்கடைகள் இருக்கின்றன.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து கூறினேன். விதிக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அகற்றப்படும் என்றார்.
மேலும், அரசுக்கு நிறைய செலவு.. மானியம், இனாம்.. அதனால் மதுக்கடைகளை மூட முடியவில்லை என்றார்.
ஆகவே பெண்களே, மிக்சி, டிவி, தாலிக்கு தங்கம்.. இப்போது கொடுத்தார்களே பொங்கல் பண்டிகைக்கு 24 பொருட்கள்.. எதுவானாலும் இனாம் வாங்காதீர்கள்.
அரசுக்கு மதுக்கடை மூலம் வரும் 34 ஆயிரம் கோடி வருவாய் மூலம்தான் அவை தரப்படுகின்றன. ஆகவே இனாம் பொருட்களை வாங்காதீர்கள்.
அதே நேரத்தில், குடும்பத்தில் நிம்மதியைக் கெடுக்கும் மது வேண்டாம் என முதலமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “பெண்களை மதிப்புடன் பார்க்க வேண்டும். ஆனால் சில வக்கிர ஆண்களால் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். தன் சகோதரியாக, மகளாக, பேத்தியாக பார்த்தால் அந்த எண்ணம் வராது.
தவிர, பாலியல் பலாத்காரம் செய்பவர் கையை வெட்ட வேண்டும் ஏனென்றால் இங்கே பெரும்பாலும் நீதி வழங்கப்படுவதில்லை.. வாங்கப்படுகிறது!” என்று அதிரடியாக பேசி முடித்தார் கே.ராஜன்