சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தெருநாய்களின்  தொல்லை அதிகரித்துள்ளதால்,  நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி 120 நாட்கள் நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் ஒரு தெருநாய் கடித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 20 பேர் பாதிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த தெருநாய் அடித்துக்கொல்லப்பட்டது. பின்னர், அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், காய் கடித்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதுபோல சென்னையின் பல தெருக்களில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஏராளமான புகார்களும் மாநகராட்சியில் குவிந்துள்ளன.

இந்த நிலையில், தெரு நாய்களினால் பொதுமக்களுக்கும் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகிய்ல நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 910 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், அதற்கு ரேபிஸ் நோய் ஏற்படுவதை தடுக்கவும் வகையில், தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இணக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து வருகின்றன. தற்போது கூடுதல் நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி 1 முதல் 15 வரை அனைத்து மண்டலங்களிலும் தெருக்களிலுள்ள நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மாநகராட்சி, “சென்னை நகரை வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரமாகவ உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவு சார்பில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை செயல்படுத்தும் தீர்மாணம் விரைவில் கொண்டு வரப்படுகிறது. மேலும் தற்போது, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி, நாய்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடி நோயினை முற்றிலும் தடுப்பதற்கு அதற்கான தடுப்பூசியினை அனைத்து நாய்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையின் கீழ் நடத்தப்படவுள்ளது.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 57ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகபுற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் திட்டத்தின் கீழ் 68ஆயிரத்து 577 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி கொண்டு வரப்படும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர், தெரு நாய்களை பிடிக்க தேவைப்படும் நான்கு நாய் பிடிக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் இருவர், ஒரு வாடகை வாகனம் மற்றும் ஓட்டுனர் தேவைப்படுகின்றனர். இத்திட்டத்தில் தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்குச் சென்று நாய்பிடிக்கும் பணியாளர்கள் வலைகளைக் கொண்டு பிடித்த பின்னர், கால்நடை மருத்துவரால் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தியவுடன் வண்ண சாயம் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு அவை அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.

நாய்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 10% உயர்ந்து இருக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில், மூன்று வருடத்திற்கு 30% உயர்ந்திருக்கும் பட்சத்தில் தற்போது 93 ஆயிரம் எண்ணிக்கையிலான நாய்கள் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் 7 குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் நாள் ஒன்றுக்கு தோராயமாக 130 தெருநாய்கள் என மொத்தமாக நாள் ஒன்றுக்கு தோராயமாக 910 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.