சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  நீர்வரத்து அதிகரிப்பால்  தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல்  தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மற்றும் அண்டைய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து மளமளவென உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள் அளவு  24 அடி உயரம்  என்ற நிலையில், தற்போது ஏரியில் 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.  இதன் காரணமாக, ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளத.

இன்று காலை 10.30 மணி அளவில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஏரியில் இருந்து  வினாடிக்கு 200 கனஅடி நீர் ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக  திறக்கப்பட்டள்ளது. இதனால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.