மதுரை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்த முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற ஆயுஷ் மருத்துவ முறைகள், அலோபதி மருத்துவம் ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, நாடு முழுதும், அலோபதி மருத்துவர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் போராட்டம் நடந்தது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து இன்று ஒருநாள் தமிழகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாக கூறி, போராட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளனர்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி வழியாக பேசிய போது,  இந்த முறையீட்டை அவர்கள் முன் வைத்துள்ளனர். இதனையடுத்து அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.