சென்னை: இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக அவர் கூறி உள்ளார்.

இது பற்றிய அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.