ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உணர்வு ரீதியாக எந்தச் சோர்வும் இல்லை. ஆனால், தொடர்ந்து போராட்டக் களத்தில் இருப்பதால் உடல் ரீதியாக சிறிது சோர்ந்து போய்த்தான்  இருக்கிறார்கள்.

“எங்களுக்கு குடிக்க நீர் வேண்டும்”என்ற குரல் போராட்டக்கள்ததில் ஆங்காங்கு ஒலிக்கத்தான் செய்கிறது. அருகில் இருப்பவர்கள் தங்களால்  முடிந்த அளவு  உதவிகளை செய்துதான் வருகிறார்கள். ஆனால் அவை போதுமானதாக இல்லை.

இன்னொருபுறம், மக்கள் இவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள். தருமபுரி, சேலம், தஞ்சாவூர் என பல ஊர்களில் இருந்து  இளைஞர்கள் உதவிப் பொருட்களுடன் போராட்டக்களங்களுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்ய விருப்பமுள்ளோரையும் இணைக்கும் முயற்சியாக இரு ஹாஷ் டேக்குகளை போராட்டக்காரர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது:

“உதவி தேவைப்படுவர்களையும்… உதவ முன்வருபவர்களையும் இணைக்க சிறு முயற்சியார இரு  ஹாஷ் டேக்குகளை உண்டாக்கி இருக்கிறோம்.

உதவி தேவைப்படுபவர்கள் #NeedHelp4JallikattuProtest என்ற ஹாஷ் டேக்கையும்..

உதவ முன்வருபவர்கள் #WeHelp4JallikattuProtest என்ற ஹாஷ் டேக்கையும் பயன்படுத்தி இணையலாம்

தற்போது காரப்பாக்கத்தில் தங்கவேலு பொறியியல் கல்லூரிக்கு எதிரில் போராடும் இளைஞர்களுக்குத் தண்ணீரும், பிஸ்கட்டும் தேவைப்படுகிறது… #NeedHelp4JallikattuProtest” என்றஉ தெரிவித்துள்ளார்கள்.