சென்னை:
தத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தமிழக கோயில்களில் 216 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடத்தப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், திமுகவின் சாதனைகளைப் பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைப்பது எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. முதலமைச்சர் தான் அமைச்சரை வேலை வாங்குவார், ஆனால் முதல்வரை வேலை வாங்கும் அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு உள்ளார். இதுவரை அறநிலையத்துறை 3700 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இச்சாதனைகளைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளோம். இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

அதனால் தான் அவர்கள் பொய், பித்தலாட்டத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. திமுகவின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

அதே போல, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனச் செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் இன்று 217 பேருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நமக்குத் தான் உண்டு என்றும் தெரிவித்தார்.