சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.  சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் மேற்கொண்டதாக கூறி நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து,  ஈஷா அறக்கட்டளை சார்பில் சி.ஆர். தினேஷ் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அதில், தங்கள் வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் முதல் 2012 ஆம் ஆண்டு வரை 91,519 சதுர மீட்டர் அளவிற்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு, உண்டு உறைவிட பள்ளி, யோகா பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிற்து.

இவை அனைத்தும், 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பிட்டு விதிகளின் படி தங்கள் கல்வி கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி மேற்கொண்டு கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழகஅரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால்,  2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட புதிய விதிகளின்படி 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்படும் கல்வி நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும்,  2014க்கு முன்பும் மற்றும் பின்பும் என கட்டிடங்களை இருவகையாக பிரித்ததாகவும், கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் தங்கள் கட்டிடத்துக்கும் சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவை என்பதில் இருந்து விலக்கு கோரி ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளோம்.

ஆனால்,   கடந்த நவம்பர் 19ஆம் தேதி, விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த  நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், 2014ஆம் ஆண்டு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும், கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டார், நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, , தமிழக அரசு தரப்பில், ஏற்கனவே சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில் முன் தேதியிட்டு அமல்படுத்துவதாக குறிப்பிடப்படாத நிலையில், அதற்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகஅரசு  கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.  அதுவரை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்தனர்.