சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதை அதிமுக தலைமை மறுத்துள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன்  ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் முக்கியமானவர் மதுசூதனன்.

இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நிலை குறைவு ஏற்படடது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அப்பொழுது அவருடைய உடல்நிலை கருத்தில்கொண்டு அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. அனால் அவர் அவைத்தலைவர் பதவி தனக்கு ஜெயலலிதா கொடுத்தது என்று கூறி நான் சாகும் வரை அவைத்தலைவர் பதவியில் தொடர்வேன் என்றும் தெரிவித்ததார். அதனால், அவர் தொடர்ந்து அவைத்தலைவராக நீடித்து வருகிறார். அதையடுத்து அவ்வப்போது அவரது உடல்நிலை பாதிப்பு தொடர்ந்து வருககிறது.

இநத் நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுசூதனன் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு, அவரால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுசூதனன்  இறந்துவிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இதைத்தொடர்ந்து பலர்,  இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

மதுசூதனன் உடல்நிலை குறித்து நேரில் பார்த்து தெரிவித்து கொள்ளும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில் இருந்து  சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.