“காங்கிரஸின் 4 உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழுதுமே நடக்காத ஒன்று.

இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று, இந்த இடை நீக்கம் கண்டனத்திற்குரியது” என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் எங்கள் பேச்சுரிமையை நசுக்கியுள்ளனர், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரலே ஒலிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.

எங்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் சொல்லாமல் வேறு எங்கு சென்று சொல்வது” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் கோஷம் எழுப்பியதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என். பிரதாபன் ஆகியோர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பினர்கள் யாரும் பதாகைகள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் கோஷம் எழுப்பிய ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்