சென்னை: திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில்,  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார்.

இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட உள்ளதுடன்,   மாலை 7 மணிக்கு மாநாட்டு திடல் அருகில் முதல்வர் முன்னிலையில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி மாநாடு 3வது முறையாக ஜனவரி 21ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு திட்டல்  சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்த நாயக்கன்பாளையம் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியி

இந்த மாநாட்டை  முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞர் அணி தலைவர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  நாளை (21 ஆம் தேதி) தொடங்க உள்ள மாநாட்டு நிகழ்ச்சியில்  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.45 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும், 2.5 லட்சம் பேர் மாநாடு நடைபெறும் இடத்தில் இறந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்துகொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். சேலம் விமான நிலையம், ஓமலூர், கருப்பூர் சுங்கச்சாவடி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வரை 65 கிலோமீட்டர் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு சாலை மார்க்கமாக பெத்த நாயக்கன்பாளையம் மாநாடு நடைபெறும் இடத்தை முதல்வர் பார்வையிடுகிறார்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக இன்று மாலை இளைஞர் அணி மாநாடு திடல் வந்தடைய உள்ளது. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளார்.

பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்டும் 1,500 இருசக்கர வாகனங்கள் பேரணி மாநாட்டு பந்தலுக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1000 ட்ரோன்களை கொண்டு ட்ரோன் ஷோ (Drone Show) நடத்தப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் திறந்து வைக்க உள்ளார்.

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார்.

அதையடுத்து, திமுக தலைவர் மு.க‌.ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பின்னர், நிகழ்ச்சியின் நுழைவாயில்களை எழிலரசன் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 22 பேச்சாளர்கள் மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி தலைமை உரையாற்ற உள்ளார்.  அவரைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்ற உள்ளனர்.  இறுதியாக மாலை 7 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் மாநில உரிமைகளை மீட்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.

முதல்வரை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் பெத்தநாயக்கன்பாளையம் வரை 20 அடிக்கு ஒரு மின் விளக்கு என 65 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கொடி சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 4 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என திமுக தலைமை கூறி உள்ளது. இதனால், இந்த மாநாட்டில்  கலந்து கொள்ள திமுக தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் அழைத்து வருகின்றனர்.  இன்று காலை முதல் பல பகுதிகளில் இருந்து திமுக கொடிகளுடன் வாகனங்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து வாகனங்களில் சேலம் நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் சேலம் மாவட்டமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.