சென்னை:

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை புதன்கிழமை அணுக திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏசி.சண்முகமும் போட்டியிடுகின்றனர்.

கதிர் ஆனந்தன் பள்ளி, கல்லூரி, வீடுகளில் கோடிக்கணக்கில் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, வேலூர் மக்களவை தேர்தலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பு 2 வேட்பாளர்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும், இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை முறையீடு செய்ய திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதறகிடையே, வேலூர் மக்களவை தொகுதியில் மட்டுமே தேர்தல் ரத்து. குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.