சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் இன்று 10 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன் விழா வளைவு மற்றும் எழும்பூர், திருவான்மியூர் உள்பட பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை சைதைப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தில்,  சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக வந்த தகவல்களை தொடர்ந்து எழும்பூர், சென்ட்ரல் போன்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் என்று ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.