டெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான இடங்களை நிரப்ப தேர்தல் நடத்த கோரி,  இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக எம்.பி.க்களான  வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இதனால், இருவரும் தங்களின் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், 2019ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி. முகமது ஜானும்  கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது.

இந்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக  தேர்தலை உடனே  நடத்தக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. வில்சன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவை  சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இந்த 3 மாநிலங்களவை இடங்களுக்கும் குஜராத்தில் நடத்தப்பட்டதுபோல், தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.