சென்னை: இன்று மாலை திமுக முப்பெரும் விழா திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அண்ணா அறிவாலயம்  வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது இது தொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15,  தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுக முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இன்றைய நாளில், கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கியும் கவுரவித்து வருகிறது. அதன்படி, இன்று திமுக முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இன்றைய விழாவில்,  திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பெரியார் விருது,  அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மக்கள் நலனுக்காகப் பாடுபட்டோருக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளித்திடும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பெரியார் விருது ‘மிசா’ பி.மதிவாணன், அண்ணா விருது சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல்.மூக்கையா, கலைஞர் விருது சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, பாவேந்தர் விருது வாசுகி ரமணன், பேராசிரியர் விருது சட்டமன்ற முன்னாள் கொறடா பா.மு.முபாரக் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது.

இன்றைய விழா காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது வழங்கும் விழா நேரடியாக நடைபெற உள்ளது.  இன்று மாலை 5 மணி அளவில்    சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த முப்பெரும் விழாவை  மாவட்டங்களில்-ஒன்றியங்களில் இருந்து காணொலி வாயிலாக காணவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், திமுக முன்னணியினர் செய்து வருகின்றனர்.

இதையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலி ஜொலித்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.