சென்னை:  பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 16ந்தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க செப்டம்பர் ,16ந்தேதி  திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் திமுக.,வின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்’ 16-09-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணி அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகம். – பொதுச்செயலாளர், அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு