விழுப்புரம்: பஞ்சமி நிலத்தில் விதிகளை மீறி கல்லூரி கட்டும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கீழ் எடையாளம் கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலத்தை, தமிழ்நாடு அரசு சார்பில், அந்த பகுதிபட்டியல் இன சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்டடுள்ளது.  இந்த இடங்களை,  வழுதாவூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன்  ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பஞ்சமி நிலத்தில் சுமார் 110 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்துள்ள திமுக எம்பி,  அந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தன் மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருகிறார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும், தற்போது பாஜக மூலம், அந்த இடத்தை மீட்க முயற்சி செய்வதாக தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, அந்த பகுதியை ஆய்வு செய்த மாவட்ட பாஜகவினர், இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது உரிய விசாரணை செய்து, பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல  பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இருந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சமி நிலங்களை யாராலும் வாங்க முடியாது என்பதால், அதிகாரிகள் துணையுடன் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் அரசு ஆவணங்களில்  திருத்தங்களை செய்து மோசடி செய்து இடத்தை வளைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.