சென்னை:  சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில்,  அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளத.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் என பலரை அமலாக்கத்துறை ரவுண்டு கட்டி வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்ற நிலையில், அமைச்சர்கள் பொன்முடி உள்பட சிலரது வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டபோது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அவருக்கு சொந்தமான  வீடு, தோட்டம்  உள்பட பல இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.10 லட்சம்பணம்  கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது நண்பரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது,  ரூ.11.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததா எனவும் விசாரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 28-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கதிர் ஆனந்துக்கு மலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், கதிர் ஆனந்த் விசாரணைக்கு  ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் மணல் விற்பனை மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் துரைமுருகனின் கட்டுப்பட்டில் உள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. இந்த நிலையில்  கதிர்ஆனந்த் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை  விசாரணைக்கு அழைத்து கைது செய்துள்ள நிலையில், திமுக எம்.பி. கதிர் ஆனந்தும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்….. அதிர்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்…