சென்னை: இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தி திணிப்பை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. அக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது முக்கிய கொள்கையாகும். ஆனால், அக்கட்சியின் முக்கிய எம்.பியான கனிமொழிக்கு விமானநிலையத்தில் அதிர்ச்சி அனுபவம் நடந்துள்ளது.

கனிமொழி விமான நிலையத்திற்கு வந்தபோது பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய தொழிற்படை வீரர் சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியில் கேட்டுள்ளார். அப்போது, கனிமொழி தமக்கு இந்தி தெரியாது, ஆங்கிலம்,  தமிழ்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த CISF வீரர் மீண்டும் நீங்கள் இந்தியர் தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். விமானநிலையத்தில் தனக்கு நடந்த அனுபவத்தை கனிமொழி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

இன்று விமானநிலையத்தில், எனக்கு இந்தி தெரியாது. என்னிடம் தமிழிலோ, இந்தியிலோ பேசுங்கள் என்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியிடம் நான் கூறியபோது, அவர் உடனே நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பினார். இந்தி தெரிந்திருந்தால் இந்தியர் என்பது எப்போதிலிருந்து ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த டுவிட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு நடந்ததை குறிப்பிட்டும், இந்திக்கும் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.