சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனையுடன் தமிழகஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் ரெலா மருத்துவ மனைக்கும் இடையே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, அவரது ரேலா மருத்துவமனை யில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், இனிமேல் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆபரேஷன் உள்பட முக்கிய பணிகளில் ஈடுபடலாம்.

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரேலா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சென்னை குரோம்பேட்டையில் உள்ளது.  குரோம்பேட்டை ஒர்க்ஸ் சாலையில் 36 ஏக்கர் பரப்பளவில் டாக்டர் ரேலா நிலையம் மற்றும் மருத்துவ மையம் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் இந்த மருத்துவ மையத்தின் நிறுவனராகவும், மகள் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா நிர்வாக தலைவராகவும் உள்ளார். மருத்துவ மையத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் ரேலா இருக்கிறார்.

இந்த மருத்துவமனையானது சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி,  ரேலா மருத்துவமனைக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை என 5 அரசு மருத்துவமனைகளுக்கும் இடையே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,   ரேலா  மருத்துவமனையுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி,  ரேலா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு அரசு மருத்துவமனைக்கு வந்து மாற்று அறுவை சிகிச்சையை செய்வார்கள். இந்த அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் உடனிருந்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். அதுபோல, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் நோயாளிகள் மட்டும் ரேலா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா ”உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பல மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள சிகிச்சை முறையை பின்பற்றுகின்றனர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 19 லட்சம் வரை அரசு செலவை ஏற்கிறது. இதனால் உரிய சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்தில் பணம் இல்லாமல் சிகிச்சை இன்றி உயிரிழக்கும் எண்ணிக்கை இல்லை எனவும், மற்ற மாநிலங்களில் பணம் இல்லாததால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பலர் உயிரிழக்கின்றனர்.

தமிழக அரசின் நடவடிக்கையால், தமிழக சுகாதாரத்துறை மக்களின் சிகிச்சைக்காக தொகை ஒதுக்குவதில் முன்னோடி மாநிலமாக உள்ளது என கூறினார்,

அரசு மருத்துவமனைகளில் ஸ்டான்லி மருத்துவமனையில் 2009ஆம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,043 நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 225 கோடியில் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 314 பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருகிறார்கள் என்று கூறினார்.

தலசிமியா, ரத்த புற்றுநோய், ரத்த சோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை 1,493 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 149 கோடியில் செய்யப்பட்டுள்ளது.  மேலும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 19 லட்சமும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு 3 லட்சமும் செலவிடப்படுகிறது.