சென்னை: பாஜக குறித்து அதிமுக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

சென்னை மண்ணடியில் தொகுதி மேம்பாட்டுநிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பிடம் கட்டும் பணியை  அவர் தொடங்கி வைத்தார். பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500க்கும் மேற்பட்டவர்களுக்கு திமுக-வின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் மளிகை பொருட்களை நிவாரணமாக தயாநிதி மாறன் வழங்கினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, பாஜக இடையே தான் போட்டி என்பது நகைப்புக்குரியது. அதிமுக ஒன்றுமே இல்லையென்று அவர்களே தெரிவித்துள்ளார்கள். இதன் பிறகாவது பாஜக குறித்து அதிமுக புரிந்துகொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும்.

வி.பி.துரைசாமி குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க விருப்பமில்லை.  திமுக மத நல்லிணக்கத்திற்கானது, மத அரசியல் செய்யும் இயக்கம் பாஜக, அதற்கு தமிழகத்தில் இடம் கிடையாது. சென்னை விமான நிலையத்தில் தமிழ்ப் பேசும் அதிகாரியை பணியில் அமர்த்துவது காலம் கடந்த முடிவு என்றார்.