ஸ்ரீவில்லிபுத்தூர்:  திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 27ந்திக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம்  இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்து உள்ளது.

2006 மாநில சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்குப் பிறகு மு. கருணாநிதி ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றார், 1952 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் முதல் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் கேகேஎஸ்எஸ்ஆரும் இடம்பெற்றிருந்தார். இவர்,  திமுக ஆட்சிக் காலத்தில்,  அதாவத, கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் கடந்த 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், அமைச்சர் பதவியை பயன்படுத்தி, முறைகேடாக, வருமானத்திற்கு அதிகமாக  44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை  சோ்த்ததாக  புகார் கூறப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய மூகாந்திரம் இல்லை என கூறி,  சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உள்பட  அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பை பெறுகின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ், இந்த தீர்ப்பை தாமாக முன்வந்து கிரிமினல் மறு ஆய்வு மனு என்ற அடிப்படையில்  விசாரணைக்கு எடுத்தார். தொடர்ந்து,, லஞ்ச ஒழிப்புத் துறையும்  குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு  விசாரணை நடைபெற்று வருகிறது.  நவம்பர் 2ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது,  அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ”தான் விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிமன்றம் எடுக்க எந்த காரணமும் இல்லை என்று குறிப்பிட்டதுடன், சொத்து விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை, அப்போலோ மருத்துவமனைக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை எப்படி சட்டவிரோத வருமானம் என சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாக இருந்தால் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்க வேண்டுமெனவும், அமைச்சர் என்பதாலேயே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க கூடாது என வாதிட்டார்.

தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக வைத்து வாதிடுமாறு தெரிவித்த நீதிபதி, மற்ற வழக்குகளை போல இதுவும் தங்களுக்கு ஒரு வழக்கு தான் என கூறினார்.

மேலும் கீழமை நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டதும், தன்னை வழக்கிலிருந்து விடுவித்ததும் வெவ்வேறு நீதிபதிகள் என்பதை சுட்டிக்காட்டியதுடன், தான் விடுவிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அமைச்சர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று வழக்கின் விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.