சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் உள்ளதால், காணொலி காட்சி மூலமாக கூட இந்த ஆலோசனையை நடத்தலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசியலாக்க விரும்பவில்லை. எனவே, இந்த தருணத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருந்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கும், ஸ்டாலினுக்கும் இடையே சில நாட்களாகவே அறிக்கை போர் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு, மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.