சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின்  துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, பேசும்போது, மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மட்டும் வெற்றி என்ற நிலையை மாற்றி, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோதும் வெற்றி பெற்றோம். பின்னர்,  மு.க.ஸ்டாலின் முதல்மைச்சரான பின்னரும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். இதுவரை 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். ஆனால், நம்மைப்போல அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களா?  இந்த வெற்றி இதோடு நிற்காது தொடரும்,

தனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் உழைத்துகொண்டிருக்கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கிற போது, எல்லோருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. இப்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள். இந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான், அந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும், தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை நான் ஏதோ மேடை பேச்சுக்காக சொல்லவில்லை. நான் உறுதியாக சொல்கிறேன் என்றவர், அடுத்த 20 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் இருக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் திமுக தனியாக 173 தொகுதிகளில் போட்டியிட்டது.  மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும்,  மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மனித நேய மக்கள் கட்சி (ஒரு தொகுதி மட்டும்),மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர், அகில இந்திய பார்வார்டு பிளாக் பேரவை உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில்  போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.