சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் கொடுத்துள்ளது திமுக, திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நீட் ரத்து, கல்வி கடன் ரத்து உள்பட பல அறிவிப்புகள், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுகள் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.

 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை.

என தெரிவித்துள்ளார்.