சென்னை: மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், 2026 தேர்தல், கட்சி நிலவரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள்  குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 2026  மே ஜூனில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  இந்த தேர்தல் கடந்த சட்டமன்ற தேர்தலைவிட கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான அப்படியே தொடரும் நிலையில்,  மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. மேலும் பாமக, தேமுதிக எந்த அணியில் சேரப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் இணைக்க அதிமுக, பாஜக தலைமைகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதே வேளையில் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தவெக, தங்களுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு என ஆசை காட்டி உள்ளது. இதனால் இந்த முறை 3 முதல் 5 கட்ட போட்டி ஏற்படும் நிலை  உள்ளது.

இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் ஏற்கனவே களப்பணிகளை தொடங்கி உள்ளன.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  தலைமையிலான தேர்தல் பணிக்குழுவை ஏற்கனவே திமுக தலைமை அறிவித்து,  தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.  மேலும் முதல்வர் ஸ்டாலினும் மாவட்ட கள ஆய்வு சுற்றுப்பயணத்தின்போது, கட்சி நிர்வாகிகளை சந்தித்தும், தேர்தல் தொடர்பான நிலவரங்களை கேட்டறிந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தச் சூழலில், சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, கட்சிப்பணிகள் குறிப்பாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் மே 3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தேர்தல் பணிகளை உடனே தொடங்குவது, கட்சி நிர்வாகிகள் மாற்றம், இளம் நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் போன்றவை விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.