கோவை:  பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் உள்பட அனைத்து மக்களுக்கும்  உறுதுணையாக இருப்பவர் என்றும், ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அவர்மீது பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகிறவதாகவும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மேலும், தமிழகத்தில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில்  திமுகவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தென்சென்னை மக்களவை தொகுதி வேட்பாளரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும்.

அதே நேரத்தில் வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக கடமையாகும்.   வாக்கு அளிப்பதற்கான அனைத்து ஆவணங்களும் இருந்த போதும் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது.  பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கியதால்தான் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதை சரி செய்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.  ஆனால், அதை செய்ய தேர்தல் ஆணையம் தவறி விட்டது. ஒருவரின் வாக்களிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது’  என்றவர், இந்த விஷயத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றார்.

வாக்காளர் பட்டியலில் மொத்தமாக வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சியினரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்கே அவர்கள் தான் காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விஷத்தில், தோல்வி பயத்தால் பா.ஜ.க இந்த கருத்தினை முன் வைப்பதாக கூறப்படுவது தவறானது.  நான் உட்பட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம். ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவசியமாகும். இதில் தோல்வி பயம் எதுவும் இல்லை.

தொடர்ந்து பேசியவர், ‘பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும், திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.  எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார். நாடு முழுவதும், 10 கோடி நபர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய மக்கள் பயன் அடைந்து உள்ளனர். அதே போல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மக்கள் பலனடைந்து உள்ளனர்.

ஆனால்,  காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்ணுரிமை குறித்து பேசி வருகிறார். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை.

கடந்த 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார். இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை.  ஆனால்,  பிரதமர் மோடி ஹஜ் யாத்திரை  விஸா நடவடிக்கைகளை தளர்த்தி இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு வழிவகை செய்து உள்ளார்.

அலிகார் பல்கலைக் கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை. இப்போது நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் 25 கோடி ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. கோவிட் காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளே தடுமாறிய போது, அந்த சூழ்நிலையை சமாளித்து இலவசமாக தடுப்பூசி வழங்கி லட்சக் கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.

ஆனால், காங்கிரஸ் கட்சி  மட்டுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக் கூடாது என மோடி பேசி உள்ளார். இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது.

தற்போது இண்டியா கூட்டணியைச் சேர்ந்த இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். இதுவே இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலையாக உள்ளது. ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால் இந்தி எதிர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். எனவே தான் செல்லவில்லை . தி.மு.க வில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை.

ஆனால், பா.ஜ.க வில் மட்டுமே யாரும் தலைவராகவும், ஆளுநராகவும் எந்த பாகுபாடும் இன்றி ஆக முடியும்.

இவ்வாறு கூறினார்.