சென்னை: ஜனவரி 26ந்தேதி அன்று மாலை நடைபெறும் ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து உள்ளன.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொள்வார். அதைத்தொடர்ந்து அன்று மாலை ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருந்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு உள்பட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்து உள்ளன. அதன்படி,  காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.