சென்னை

டசென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் மதிவாணன் திமுகவில் இணைந்ததால் புதிய செயலாளரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.

வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளராக ப மதிவாணன் பதவி வகித்து வந்தார்.   அவர் நேற்று காலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டார்.  அவருக்கு வரவேற்பு அளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கி உள்ளார்.   இந்நிகழ்வின் போது திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் உள்ளிடோர் உடன் இருந்தனர்.

இதையொட்டி வடசென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.   இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிகவின் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக எம்.செந்தில்குமார் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ஆர்.கே.நகர், ராயபுரம் சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இதேபோல், வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக எம்.வேல்முருகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்குக் கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி  நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.