சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பஸ்களில் ஆரம்ப கட்டணம் ரு. 750ல் இருந்து துவங்கும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.
தனியார்  பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் பாண்டியன் சென்னை கோயம்பேட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “தீபாவளியை முன்னிட்டு வரும்  27 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை  600 சிறப்பு பேருந்துகள் உட்பட  1200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி வழியாகவும், வண்டலூர் வழியாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.   தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.
a
கடந்த  13 ஆம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த  ஆலோசனை கூட்டத்தில் சங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிகப் படியான கட்டணங்கள்  வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயம்பேட்டில் வரும்  27 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு புகார் மையங்கள் அமைக்கப்படும். மேலும் குழுக்கள்  அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்  என தெரிவித்தார்.  இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்” என்று பாண்டியன் தெரிவித்தார்.