சென்னை: அரசுக்கு சொந்தமாக கட்டிடங்கள் கட்டும்போது  இனி மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல்  கட்டிடங்கள் கட்டக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறநாளிகளுக்கு வசதி கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து தமிழகஅரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், , 32 மாவட்டங்களில் அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தது.

இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.

இதையடுத்து,  அனைத்து அரசு கட்டிடங்களும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும்,  மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டிடங்களும் கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.