சென்னை: தமிழகத்தில் இன்று பிளஸ்1 தேர்வு முடிவு வெளியான நிலையில்,  மதிப்பெண் பட்டியல், மறுதேர்வு, மறுகூட்டல், துணைத்தேர்வுக் கான தேதிகளை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த மே மாதம் பிளஸ்1 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று இணைய தளத்தில் வெளிளிடப்பட்டது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம்,புதுச்சேரியில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு எழுதிய நிலையில்,7,79,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக பொதுத்தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.13% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வை எழுதும் மாணவர்கள் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி, https://www.dge.tn.gov.in/  என்ற இணையதளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். மேலும்,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதே சமயம்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் வாயிலாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10,12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் எனவும், 12-ம் வகுப்புக்கு ஜூலை 25 – ஆகஸ்ட் 1 வரை துணைத்தேர்வு நடைபெறும் நிலையில்,10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் ஆக. 8 வரை துணைத்தேர்வு நடைபெறவுள்ளது.