சென்னை:

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்று கோரி இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சேரன் கூறுகையில், ‘‘ தயாரிப்பாளர் சங்க தலைவர் பதிவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட வேண்டும். விஷால் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும். ராஜினாமா செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும். மறுத்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல்வாதிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சங்கத் தலைவரான 8 மாதத்தில் கொடுத்த வேலைகள் எதையும் நிறைவேற்றவில்லை. இயலாமையை கருத்தில் கொண்டு சங்க பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.