சென்னை: அதிமுகவின் புதிய இடைக்கல பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள  எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து அறிவித்து உள்ளார்.

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்ட நிலையில், அது தொடர்பான சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபடுவதாக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.