அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம்.
 
பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது.  வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் விஜயநகரப்பேரரசு காலத்தில் தென்திசைக்கு வந்தார். அப்போது, தான் தினமும் வணங்கி வந்த அம்பாள் கோவிலில் இருந்து சிறிது மண் எடுத்து வைத்துக் கொண்டார்.
அம்பிகை, தான் விரும்பும் இடத்தில் மண்ணை வைத்து, தன்னை வணங்கும்படி உத்தரவிட்டாள். அதன்படி பக்தர் இவ்விடத்தில் அம்பிகை உத்தரவுப்படி மண்ணை வைத்தார். அங்கு ஒரு கல்லை மட்டும் வைத்து அம்பிகையை வணங்கி வந்தார். பிறகு இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்பிகையர் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார். அம்பிகைக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காகத் தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில் ஊருக்கு அகரம் எனவும் பெயர் ஏற்பட்டது.
தல பெருமை :
அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் பூதராஜா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இக்கோவிலில் விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகள் நீங்க பூதராஜாவிடம் உத்தரவு கேட்கின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராஜா முன் நின்று கொண்டு, தங்கள் பிரார்த்தனையைச் சொல்வர். அப்போது, பல்லி சபதமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலைத் துவங்குகின்றனர்.
மஞ்சள் பிரார்த்தனை :
குழந்தை பாக்கியம் கிடைக்க அம்பாள் சன்னதியில் 5 எலுமிச்சை மற்றும் குளியல் மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்பாள் பாதத்தில் வைத்துப் பூஜித்துத் தரும் எலுமிச்சையைச் சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கைக் குளித்தும் வரக் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள்.
எந்தச்செயலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் அடிப்படையாகத் தேவைப்படும். முதலில் செய்ய வேண்டிய செயலைப் பற்றி ஆசைப்பட வேண்டும். பின், ஞானத்துடன் அதைச் செயல்படுத்த வேண்டும். இவையே இச்சா (ஆசை) சக்தி, கிரியா (செயல்) சக்தி, ஞான (அறிவு) சக்தி எனப்படும். இம்மூன்றையும் தரும் மூன்று அம்பிகையர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இம்மூவரும் நின்றபடி, கையில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் இருக்கின்றனர்.
பிரார்த்தனை :
குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகள் நீங்க காவல் தெய்வமான பூதராஜாவை வணங்குகின்றனர்   அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அபிஷேகம் செய்தும், முடிக்காணிக்கை, அங்கப்பிரதட்சணம் செய்வித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.