தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கப்படுவதை அடுத்து பள்ளியில் வந்து சாப்பிட பெற்றோர்களுக்கு அறிவுறுத்திய ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கழிப்பறையை பயன்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை சுகாதார அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை “காலை உணவு திட்டம்… மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு… ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று அநாகரீகமா தலைப்பிட்டு குழந்தைகளையும் தமிழக அரசின் திட்டத்தையும் ஒரு சேர விமர்சித்துள்ளதுடன், உணவுடன் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியில் மண் அள்ளிப் போடும் நோக்கத்தில் செய்தி வெளியிட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தினமலர் நாளிதழின் இந்த செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார், தவிர தினமலர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக த.பெ.தி.க. உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்த செய்தி சேலம் பதிப்பில் வந்துள்ளதாகவும் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் வெளிவரவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தினமலர் ஆசிரியர் கி.ராமசுப்பு வெளியிட்டிருக்கும் பதிவில், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இரண்டு பதிப்புகள் கடந்த 23 ஆண்டுகளாக R. சத்தியமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும்.

தான் ஆசிரியராக உள்ள பதிப்புகளில் இந்த செய்தி வரவில்லை என்றும் விளக்கமளித்துள்ள கி.ராமசுப்பு, “இருந்த போதும் ‘தினமலர்’ பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.