சென்னை:
‘‘திமுகவும் தினகரனும் இணைந்து கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றிவிட்டனர்’’ என ஓ. பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிச்சாமியு தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ திமுகவும் தினகரனும் கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றியுள்ளனர். தமிழக மக்களின் நலன் காக்க, ஓர் உருவாய் செயல்படுவோம். அதிமுகவை பிளவுபடுத்தி யாரும் அசைத்து விட முடியாது.
நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா என்னும் தீய சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரனும், திமுகவும் ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தான் தோல்வியை சந்தித்துள்ளது. தினகரன் வெற்றி தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்பதை ஏற்க முடியாது. அதிமுக தொண்டர்களை பிளவுபடுத்தவோ, அதிமுகவை யாரும் அசைத்துவிடவோ முடியாது.
இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது. திமுக, தினகரன் கூட்டுச்சதியால் மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியை அதிமுகவுக்கு சரிவை ஏற்படுத்தாது. தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நாளில் ரூ. 20 நோட்டை கொடுத்து மக்களை நம்பவைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வேட்பாளர் மதுசூதனனுக்காக அல்லும் பகலும் பாடுபட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள், இரட்டை இலை மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.