தினகரன் மற்றும் திவாகரன்  ஆகியோர் அரசியலில் காணாமல் போவார்கள் என்று   முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

கேள்வி:- டி.டி.வி. தினகரன் அணி ஆரம்பிக்கும்போது ஜெயலலிதா பெயரை பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தீர்களே.  தற்போது திவாகரனும் அம்மா அணி என்று தொடங்கியுள்ளாரே? அவர் மீதும் வழக்கு தொடுப்பீர்களா?

பதில்:- இப்போது திவாகரன் அணி அம்மா பெயரை சொல்ல தொடங்கி இருக்கிறது. தினகரன் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாள் ஆனது. அதற்குள்ளேயே விரிசல், பிளவு வந்து விட்டது. திவாகரன் கட்சி நடைமுறைக்கு வருமா என பார்க்கலாம். தினகரன், திவாகரன் இருவருமே அரசியலில் காணாமல் போய் விடுவார்கள்.

இருவருமே இரட்டை இலை வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரு கட்சிகளும் காணாமல் போய் விடும்.

கேள்வி:- திவாகரன், தினகரனை எதிர்க்கும் அதே வேளையில் உங்கள் அணிக்கு ஆதரவாக  அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறாரே?

பதில்:- இரண்டு அணிகளுமே நிலைக்காது.  இவர்கள் வேண்டும் என்பதற்காகவே கட்சி ஆரம்பித்தார்கள். மக்கள் மத்தியில் அது எடுபடவில்லை

கேள்வி:- எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி வழக்குப்பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லையே?

பதில்:- அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- அவரை கைது செய்ய ஒரு வாரம் ஆகுமா? பேஸ்புக்கில் கூட பதிவிட்டு வருகிறாரே?

பதில்:- இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

–          இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.