சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் இன்று காலை முரதல் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவையில் மட்டும், பல்வேறு மின்னனு சாதனங்கள், ரூ.4 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனைகளின்போது, வெடிகுண்டு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த மருந்துகள், தமிழ்நாட்டின் பல இடங்களில் வெடி வைக்க திட்டமிட்டிருந்த குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டதுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மட்டும் மேலும் பல இட்ஙகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.

இநத் நிலையில், இன்று கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் மீண்டும்,  40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர்.  கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக 32 இடங்களிலும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 8 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக உக்கடம், கோட்டைமேடு வின்செண்ட் சாலை ஹவுசிங் யூனிட், குனியமுத்தூர் பிருந்தாவன் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதேபோல மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் ஒரு இடத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 2 வழக்குகளிலும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 4 இலட்ச ரூபாய் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து 2 வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தீவிரவாத செயல்களுக்கு தயாராகும் வகையில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், கடம்பூர் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட உமர் பாரூக் நடத்திய இக்கூட்டத்தில் ஜமேசா முபின், முகமது அசாரூதின், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி பங்கேற்றதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.