டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களின் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1ந்தேதி முதல்  டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு  செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

, கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 214 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பணியாற்றி அதற்கான ஊதியம் பெற்று வருகின்றனர். இதனால் பல ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், சில இடங்களில் இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றுபவர்கள்,  முறையாக பணி செய்வதில்லை என்றும், பலர் தனியாரிடம் வேலைக்கு சென்று அங்கும் கூலி வாங்குவதுடன்,  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும்  கூலி வாங்கி ஏமாற்றுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இநத் நிலையில்,  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் ஜனவரி 1-ந் தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான . தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் வருகை பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.