பெங்களூரு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக டிஐஜி ரூபா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.  அதற்கு ஆதாரமாக அவர் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட விசேஷ சிகிச்சை வீடியோவை அவர் அலுவலகத்தில் உள்ளவர்களே அழித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டிஐஜி ரூபா சசிகலாவுக்கு சிறப்பு சலுகை பரப்பன அக்ரஹாரா சிறையில் கொடுக்கப் பட்டதாகவும், அதற்காக ரூ 2 கோடி வரை கைமாறி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.  இது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.  டிஜிபி சத்யநாராயண ராவ், ரூபா சிறைக்குச் செல்லாமலே இது போல அவதூறு கிளப்பி உள்ளதாகவும், அவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூபா தான் சிறைக்குள் சென்று பார்த்தபோது, எடுத்த வீடியோ யாராலோ அழிக்கப்பட்டுவிட்டது என கூறுகிறார்.  இது பற்றி அவர், “சசிகலா விசேஷ சிகிச்சை பெறுவது, மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து நான் வீடியோவில் பதிந்திருந்தேன்.   நான் என்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஹேண்டி காம் மூலம் நானே வீடியோ எடுத்தேன்.   அலுவலகம் வந்ததும் எனது அதிகாரிகளில் ஒருவரிடம் அந்தப் பதிவை பென் டிரைவில் பதியச் சொல்லி கொடுத்தேன்.  ஆனல் என்னிடம் ஹேண்டிகாம் மட்டுமே திருப்பித் தரப்பட்டுள்ளது.   அதில் இருந்த வீடியோ காணவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், ”சிறைக்குள் பல முறைகேடுகள் நடந்துள்ளன.  இது பற்றி நான் தலைமை செயலாளருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன்.  சசிகலா தனது பார்வையாளர்களை சந்திப்பதற்காகவே சிறையில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

.