சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திர பாபு புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது. அதன்படி, அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள், பொது இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், டி.ஜே. இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும்,  கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு  அனுமதி இல்லை. மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  டிஜிபி சைலேந்திரபாபு, தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. அதனால் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கோவிட் நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. 31.12.2021 அன்று இரவு காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்;களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து இரயிலிலும் பேருந்திலும் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம். அவசரத் தேவைகளுக் காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால் ரோந்து காவலர்கள் கண்காணிப் புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

பொது இடங்களில் அமைதிக்கு குந்தம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100,  112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும் (காவலன் எஸ்.ஓ.எஸ்.) செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடியும் தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.