சிறுவாபுரி முருகன் கோயில்
மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி
கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
மயில் மேலேறிவந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த ,இத் தலத்துக்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை .
முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள கொடி மரத்தின் முன்னால் முருகனின் வாகனமான பெரிய பச்சை வண்ண மயில்
உள்ளது விசேஷமானக் காட்சியாகும்.
வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.   ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப் படுவதுண்டு.
இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார்.  அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார்.
அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார்.  தன்னால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.
சிறுவாபுரி கிராமத்தில் மூன்று ஆலயங்கள் இருந்தும், லவ-குசர்கள் பெருமை பெற்று இருந்தாலும், அங்கு அமைந்து உள்ள முருகப் பெருமானின் ஆலயமே பெரும் பெருமைப் பெற்ற ஆலயமாக உள்ளது. அதற்குக் காரணம்
1. இங்கு அமர்ந்துள்ள முருகப் பெருமான் பல சக்திகளைக் கொண்டவர்
2. லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாட்டு உள்ளார்கள்.
3. வள்ளியுடன் திருமண ஜோடியாக இங்கு வந்து முருகன் தங்கியதினால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடைபெறும்.
4. நல்ல தங்கும் இடம் அமையும் (வீடு, நிலபுலங்கள் வாங்குதல்)
5. நோய் நொடிகள் விலகும்,
6. செல்வம் சேரும்
7. இது அருணகிரிநாதர் பாடல் பெற்றத் தலம்.
8. வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாணவ மாணவியர் தேர்வுகளில் சிறப்பாக வெற்றி பெற தங்கள் பேனா, ஹால் டிக்கெட் இவைகளை இவர் பாதங்களில் வைத்து வணங்குவர்.