திருவனந்தபுரம்  உத்திரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அதனால் கோவிலுக்கு வரும்  பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது

பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக  கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், படி பூஜை போன்றவை நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, பங்குனி மாத  10 நாட்கடள் ஆறாட்டு திருவிழாவுக்காக  இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை இந்த 10 நாட்களிலும்  நடைபெறும் என்றும்,  27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28- ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

ஆராட்டு விழாவுக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு அடிப்படையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நாள் ஒன்றுக்கு  10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ள தேவசம் போர்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி, நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.