44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.

அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கியதோடு ‘தம்பி’ சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.

தவிர, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்த தருமபுரி எம்.பி. செந்தில் குமார் அவருக்கும் அழைப்பு விடுத்தார். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.