டெல்லி: அரசு பணத்தில் கட்சி விளம்பரம் செய்தது தொடர்பாக  ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி கவர்னர் மாநில தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2015 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், 2016 ஆம் ஆண்டின் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் 2016 ஆம் ஆண்டின் CCRGA இன் உத்தரவு, ஆம் ஆத்மி அரசாங்கத்தால் மீறப்பட்டுள்ளது. தனது கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம்போல் வெளியிட்ட டெல்லி அரசின் ‘தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம், 97 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட விளம்பரங்கள் “வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறுவதாக” இருப்பதைக் கண்டறிந்து, அரசாங்க விளம்பரங்களில் உள்ளடக்க ஒழுங்குமுறைக் குழு 2016 இல் தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகத்திற்கு (டிஐபி) அத்தகைய விளம்பரங்களில் செலவழித்த தொகையைக் கணக்கிட்டு வசூலிக்க உத்தரவிட்டது. அதன்படி டெல்லி  டிஐபி ரூ. 97,14,69,137 செலவழித்து உள்ளது.  “இதில், 42.26 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ஏற்கனவே டிஐபி மூலம் வெளியிடப்பட்டிருந்தாலும், வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக ரூ. 54.87 கோடி இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது” என்று கூறப்படுகிறது.

அதனால்,  ரூ. 42.26 கோடிக்கு மேல் உடனடியாக மாநிலக் கருவூலத்தில் செலுத்தவும், நிலுவையில் உள்ள ரூ. 54.87 கோடியை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் அல்லது வெளியீடு களுக்கு நேரடியாகச் செலுத்தவும் 2017 ஆம் ஆண்டு டிஐபி ஆணையிட்டது. “இருப்பினும், ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் கடந்த பிறகும், ஆம் ஆத்மி இந்த டிஐபி உத்தரவை கடைபிடிக்கவில்லை” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.