டில்லி:

டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என  டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த  20 எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆதாயம் பெறும் இரட்டை பதவி தடை சட்டத்தின் கீழ் அவர்களது பதவியை பறிக்குமாறு குடியரசுத்தலைவருக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததது.

இதை ஏற்று அந்த எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பதவி நீக்க உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் தங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன் உரிய முறையில் சட்ட விதிகள் பரிசீலிக்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை, ஆகவே பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில்,  20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது  என்று டில்லி உயர்நீதி மன்றம்  இன்று பரபரப்பு  தீர்ப்பு கூறியுள்ளது.

குடியரசு தலைவரின் உத்தரவுக்கு எதிராக டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறியிருப்பது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முக்கிய தீர்ப்பு காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு இருந்த நெருக்கடி தீர்ந்துள்ளது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், உண்மை வென்றது என்று கூறி உள்ளார்.