டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசாகத்தின் மீதான மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, அக்கட்சியைச் சேர்ந்த  எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் இந்த முறைகேடு தொடர்பாக  தெலுங்கானா சிஎம் கேசிஆர் மகள் கவிதா உள்பட பலர்மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்,  டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டுக்கு இன்று காலை திடீரென வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சஞ்சாய் சிங்கின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி எம்எல்ஏ மணீஷ் சிசோடியா பெயில் வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ள நிலையில்,  ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மற்றும், அவருடைய  அலுவலக ஊழியர்கள் சிலரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.